புத்ரா ஜெயா, மார்ச்-20, மலேசியர்களுக்கு வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்குக் குடியுரிமைக் கோரி வந்த 3,903 விண்ணப்பங்களில், இதுவரை 80% அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
மார்ச் 7-ஆம் தேதி வரைக்குமான நிலவரப்படி, மலேசியப் பெண்களுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை கோரி வந்த அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு விட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
முழுமைப் பெறாமல் வந்தது, போலி ஆவணங்களைப் பயன்படுத்திய போன்ற காரணங்கள் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
முழுமைப் பெற்ற விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும், அவை அங்கீகரிக்கப்பட்ட பிறகு விண்ணப்பத்தாரர்களுக்கு தேசியப் பதிவுத் துறை தகவல் தெரிவிக்கும் என்றும் சைஃபுடின் கூறினார்.
வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்த மலேசியப் பெண்களுக்கு வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான குடியுரிமை தொடர்பில், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் இணங்கியிருப்பதாக அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர்களுக்கான குடியுரிமை, அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்ட பிறகு, இயல்பாகவே கிடைக்கும் என்றார் அவர்.