
கோத்தா திங்கி, ஜூன்-21கெடாவில் உள்ள Hobart இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு வீரர்கள் பலியானதை அடுத்து, நாடு தழுவிய அளவில் கையெறி குண்டு வீசும் பயிற்சிகள் அனைத்தையும் மலேசிய ஆயுதப்படை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது.
ஜூன் 16-ஆம் தேதி நடைபெற்ற பயிற்சியின் போது நேர்ந்த இந்த விபத்தில், கார்ப்பரல் நோராஸ்மி அபு பாக்கார் (Norazmi Abu Bakar) மற்றும் பெண் சிப்பாய் சித்தி கதீஜா சுங்கிப் (Siti Khadijah Sungip) ஆகியோர் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
கையெறி குண்டின் பின்னை (Pin) உருவிய ஏழு வினாடிகளுக்குள் அது வீசப்பட வேண்டும் என்ற தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் SOP பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து இக்குழு விசாரிக்கும்.
இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை தடை நீடிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



