
கோலாலம்பூர், மே-11 – பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கத் தவறினால், பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.
அது நடந்தால் அமைச்சர் என்ற பெரும் பொறுப்பின் சுமை குறையும் என்பதோடு, இனி சுதந்திரமாக பேசவும் வாய்ப்பேற்படும்.
அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால், கூட்டு பொறுப்பு என்ற ஒன்று உள்ளது; அதாவது பிரதமர் மற்றும் அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது.
உதாரணத்திற்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக தான் ஸ்ரீ அசாம் பாக்கியின் சேவை நீட்டிக்கப்பட்ட முடிவை எடுத்துக் கொள்வோம்; அதில் தமக்கு உடன்பாடு இல்லையென வைத்துக் கொண்டாலும், அது குறித்து தம்மால் எதுவும் பேச இயலாது; காரணம் அது பிரதமரின் முடிவு.
இதுவே அமைச்சராக இல்லையென்றால், வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக நான் சுதந்திரமாக செயல்படுவேன்.
எனக்கு வாய்ப்பூட்டு போடவோ என் கைகளைக் கட்டி வைக்கவோ முடியாது என்றார் அவர்.
இன்னோர் உதாரணமாக, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr அக்மால் சாலே பல்வேறு விஷயங்களில் தெரிவித்து வரும் கருத்துகளை ரஃபிசி சுட்டிக் காட்டினார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா ஆலய இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அக்மால் சர்ச்சையாக பேசி வந்தாலும், அவருக்கு என்னால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
மீறி பேசினால், ஒற்றுமை அரசாங்கத் தலைவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையே என ஊடகங்கள் செய்தி வெளியிடும்.
எனவே, சொல்ல நினைத்ததை வேறு வழியில்லாமல் விழுங்கி விடுகிறேன் என அவர் சொன்னார்.
Yang Bakar Menteri போட்காஸ் பேட்டியில் பேசிய போது, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபிசி அவ்வாறு கூறினார்.
இம்மாதக் கடைசியில் நடைபெறும் பி.கே.ஆர். கட்சித் தேர்தலில், துணைத் தலைவர் பதவிக்கு ரஃபிசியை எதிர்த்து நூருல் இசா அன்வார் போட்டியிடுகிறார்.
கட்சியின் இருபெரும் புள்ளிகள் நேருக்கு நேர் மோதுவதால், போட்டி களைக் கட்டியுள்ளது.