
கோலாலம்பூர், ஜூன்- 1 – மலேசிய இந்தியக் கலைஞர்களின் அறவாரியமான YASI, செந்தூல், HGH மாநாட்டு மையத்தில் நேற்றிரவு ‘2025 YASI விருது விழாவை பிரமாண்டமாக நடத்தியது.
தமிழகத்தின் பிரபல நடிகர் கருணாஸ், ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், டத்தோ VKK. தியாகராஜன் உள்ளிட்ட பிரமுகர்களும் உள்ளூர் கலைஞர்களும் இதில் திரளாகக் கலந்துகொண்டனர்.
மலேசியத் தமிழ் கலைஞர்களைக் கொண்டாடவும் கலையுலகச் சேவையைப் பாராட்டவும் நடத்தப்பட்ட இவ்விழாவில் சுமார் 2,000 பேர் கலந்துசிறப்பித்தனர்.
விழாவில் தலைமையுரை ஆற்றிய டத்தோ ஸ்ரீ சரவணன், மறைந்த ம.இ.கா தேசியத் தலைவர் துன். ச. சாமிவேலுவுக்கு புகழ்மாலை சூட்டினார்.
கல்வி, கலை, இலக்கியம், பொருளாதாரம் என இந்தியச் சமூகத்திற்கு அவராற்றிய பங்கு அளப்பரியது என சரவணன் சொன்னார்.
துன் சாமிவேலுவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 15 கலைஞர்களுக்கு ‘துன் சாமிவேலு கலைச் செம்மல் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அவர்களில் ‘நட்டுவத் திலகம்’ Dr.இந்திராணி மாணிக்கமும் அடங்குவார்.
பல்வேறு பிரிவுகளில் மொத்தமாக 48 விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்த மண்ணின் மைந்தர்களான மலேசியா வாசுதேவன், மலேசிய ரவிசந்திரன் இருவரையும் போற்றும் வகையில் படைப்புகளும் இதில் இடம் பெற்றன.
YASI-யின் கொள்கைப் பாடலும் இசைக்கப்பட்ட இந்நிகழ்வில் தமிழகத்தின் ‘சரிகமபா’ நிகழ்ச்சி புகழ் ஹேமித்ராவின் இசைப் படைப்பும் இடம் பெற்றது.
அவருக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.
விருது பெற்ற கலைஞர்களில் சிலர் வணக்கம் மலேசியாவுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்
இதனிடையே, யாசி போன்ற விருது நிகழ்ந்சி நடத்தப்படுவது உள்ளூர் கலைஞர்கள் மேலும் தங்களது திறனை வெளிப்படுத்தி மலேசியாவிலும் உலகளவிலும் மிளிர்ந்து வர உந்துதல் அளிக்கும் என்பது திண்ணம்.