மெக்சிகோ, பிப் 14: விமானம் புறப்படுவதற்குமுன் கழிவறையை அதிகமாகப் பயன்படுத்தியதாகக் கூறி, பயணி ஒருவர் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
மெக்சிகோவிலிருந்து கிளம்பிய வெஸ்ட்ஜெட் விமானத்தில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து 10 பிப்ரவரி அன்று சமூக வலைத்தளம் வழியாக ஜோவனா சியூ என்ற அப்பயணி பகிர்ந்துகொண்டுள்ளார்.
‘தனக்கு வயிற்றுக்கோளாறு இருந்ததால் பலமுறை கழிவறை செல்ல வேண்டியதாயிற்று. இதனால், என்னை விமானத்திலிருந்து வெளியேற்றினர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், அவர் அவசரத்தில் தனது பணத்தையும் விமானத்திலேயே மறந்துவிட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சியூ, ஹோட்டலுக்குச் செல்ல டாக்சிக்குக்கூட கையில் பணமில்லாமல் தவித்ததாகவும் கண்ணீர் மல்கி காணொளி பதிவிட்டுள்ளார்.
பின்னர், விமான நிலையப் பாதுகாவலர் ஒருவருடன் இச்சம்பவம் குறித்து பேசியதாக மற்றொரு காணொளியும் அவர் பதிவுசெய்திருந்தார். அக்காணொளியில் அந்த வெஸ்ட்ஜெட் நிறுவன மேற்பார்வையாளர் ஒருவர், முன்னதாக பதிவு செய்த காணொளியை அழிக்காவிடில் மறுநாள் விமானத்திலும் ஏற முடியாது என்று மிரட்டியதாக சியூ தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அவரைத் தொடர்புகொண்ட வெஸ்ட்ஜெட், நிகழ்ந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டு, சியூவிற்கு உதவ அவரது கைப்பேசி எண்ணைப் பகிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.