கிள்ளான், ஜனவரி 3 – சிலாங்கூர், பண்டமாரான் விளையாட்டு அரங்கில், மேற்கொள்ளப்பட்ட அங்காடி வியாபாரம், இரு குடும்பங்களுக்கு இடையில் சண்டையில் முடிந்தது.
நடை பாதையை மறைக்கும் வகையில் வியாபார பொருட்களை அடுக்கி வைத்திருந்ததே அதற்கு காரணம் என கூறப்படுகிறது.
எனினும், கடந்த ஞாயிற்றுகிழமை, இரவு மணி 7.30 வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
வருகையாளர்களின் கவனத்தை ஈர்த்த அந்த சண்டை தொடர்பான 44 வினாடி காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
மூன்று குடும்ப உறுப்பினர்களுடன் அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 28 வயது பெண் ஒருவரின் உறவுக்காரர், நடை பாதையை மறைக்கும் வகையில் பொருட்களை அடுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ஹோங் போங் தெரிவித்தார்.
அது குறித்து மற்றொரு கடைக்காரர் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, முதலில் தொடங்கிய வாய்சண்டை பின்னர் கைகலப்பில் முடிந்தது.
அச்சம்பவம் தொடர்பில் இதுவரை 16 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு பேரின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்ட வேளை ; இரு தரப்பினரும் சுமூகமான முறையில் பிரச்சனைக்கு தீர்வுக் காண இணக்கம் தெரிவித்ததால், விசாரணை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையும் ஹோங் உறுதிப்படுத்தினார்.