ஜோர்ஜ்டவுன், டிச 11 – பினாங்கில் பெர்சியரான் பயான் முதியராவில் கட்டுமான பகுதியில் 200 கிலோ உடல் பருமன் கொண்ட ஆடவர் ஒருவர் சுவாசிப்பதற்கு சிரமத்தை எதிர்நோக்கியதை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதற்கு எட்டு தீயணைப்பு வீரர்கள் உதவினர்.
இச்சம்பவம் குறித்து சனிக்கிழமை இரவு மணி 8.45 அளவில் பொதுமக்களிடமிருந்து மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தகவலை பெற்றதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேராக் சாலை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களைக் கொண்ட குழுவினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
40 வயதுடைய அந்த ஆடவர் பாதிநிலையில் மயக்கமாக இருந்ததோடு சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினார். தொடக்கத்தில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த செயின்ட் ஜான் மருத்துவக் குழுவினர் அந்த ஆடவருக்கு முதலுதவி சிகிச்சையை வழங்கினர்.
அவர் அதிக உடல் பருமனாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு போர்வையை பயன்படுத்தி அவர் வேலை செய்யும் நிர்வாகத்தை சேர்ந்த டிரக் மூலம் சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.