
கோலாலம்பூர், ஜூன்-17 – கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுவது தொடர்பான தற்போதைய சட்டத்தில் உள்ள ‘ஓட்டைகளை’ ஆராய, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வுடன் கலந்துரையாடல்களை நடத்துமாறு கூட்டரசு பிரதேசத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் கைவிடப்பட்ட வாகனங்கள் தொடர்பாக பொது மக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டுமென, கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தஃபா கூறினார்.
கோலாலம்பூரில் மட்டும், கைவிடப்பட்ட வாகனங்கள் தொடர்பான பொதுப் புகார்கள் ஒவ்வோர் ஆண்டும் 2,500-க்கும் மேற்பட்ட சம்பவங்களை எட்டுகின்றன.
“இது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல, இது தொடர அனுமதிக்கப்படக்கூடாது” என்றார் அவர்.
ஆனால், சில சட்ட சிக்கல்கள் இருப்பதை அமைச்சர் ஒப்புக் கொண்டார்.
குறிப்பாக, ஊராட்சி மன்ற கிடங்கிற்கு இழுத்துச் செல்ல முடியாத தனியார் இடங்களில் கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் நீண்ட காலமாக கிடங்கில் இருந்தும் சட்டத் தடைகள் காரணமாக இன்னும் அகற்றப்படாத வாகனங்கள் ஆகியவை அடங்கும் என தனது ஃபேஸ்புக் பதிவில் சாலிஹா கூறினார்.
கைவிடப்பட்ட வாகனங்கள் மாநகரின் அழகை தொடர்ந்து ‘சேதப்படுத்த’ முடியாது.
எனவே சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் கூட்டாக ஒரு விரிவான தீர்வை உருவாக்க வேண்டும் என்று Dr சாலிஹா கேட்டுக் கொண்டார்.