
கோலாலம்பூர், மே-5- இம்மாதக் கடைசியில் மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் போது, அரசு ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யவும், மாணவர்களின் கற்றல்-கற்பித்தலை இயங்கலை வாயிலாக மேற்கொள்ளவும் அனுமதிப்பது குறித்து, அரசாங்கம் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை.
தொடர்புத் துறை அமைச்சரும் மடானி அரசாங்கப் பேச்சாளருமான டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அதனைத் தெரிவித்தார்.
இரு வாரங்களுக்கு முன் அமைச்சரவை அதனை விவாதித்தது; தற்போது விஸ்மா புத்ராவில் உள்ள ஆசியான் செயலகம் அதனை ஆழமாக ஆராந்து வருவதாக அவர் சொன்னார்.
ஆசியான் மாநாடு மற்றும் அதன் துணை மாநாடுகள் நடைபெறும் இடங்களில் வசிப்பவர்களின் நிலைமை தான், இவ்விஷயத்தில் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது.
இவ்வாரம் அல்லது அடுத்த வார அமைச்சரவைக் கூட்டங்களுக்குப் பிறகு, இது தொடர்பில் தெளிவான அறிவிப்பு வெளியாகலாமென ஃபாஹ்மி கூறினார்.
சீன அதிபர் சீ சின் பிங் அண்மையில் மலேசியாவுக்கு மேற்கொண்ட வருகையின் போது ஏராளமான சாலைகள் மூடப்பட்டதால், நெரிசல் ஏற்பட்டது குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.
இந்நிலையில், மே மாத இறுதி மற்றும் அக்டோபரில் நடக்கும் ஆசியான் உச்ச நிலை மாநாடுகளில் பங்கேற்பதற்காக வட்டார தலைவர்கள் மலேசியா வருவதால், அதன் போதும் இதே நிலை ஏற்படக் கூடாது.
எனவே, அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது மற்றும் மாணவர்கள் PdPR முறையில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்வது குறித்து பரிந்துரைக்கப்படுமென, வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான் முன்னதாகக் கூறியிருந்தார்.