
பீடோங், மே-26 – கல்வி வழி சமுதாய உருமாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் நிறுவப்பட்ட ஏய்ம்ஸ்ட்-டில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே அதன் நிர்வாகத்தின் இலக்கு.
அதனின் ஒரு முயற்சியாகத்தான் நாடு தழுவிய நிலையில் உள்ள இந்திய மாணவர்களை கல்வி சுற்றுலாவின் வழி கெடா, பீடோங்கில் உள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வளாகத்திற்கு வரவழைத்து கல்வி வாய்ப்புகளை நேரடியாகவே அவர்களிடம் பகிர்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரைச் சேர்ந்த 472 மாணவர்கள் அங்கு இலவச கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர்.
தலைநகரில் உள்ள 14 இடங்களைச் சேர்ந்த நான்காம் படிவ மாணவர்களும், SPM, STPM தேர்வெழுதி முடித்த மாணவர்களும் அங்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கோலாலாம்பூர் ம.இ.கா தலைவர் டத்தோ எஸ். ராஜா தலைமையில் மாணவர்களுடன், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களும் இந்த கல்விச் சுற்றுலாவில் பங்கேற்றனர்.
அவர்களை ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் Dr கதிரேசன் சதாசிவம், பல்கலைக்கழக செயல்பாட்டு தலைமை அதிகாரி பேராசிரியர் Dr கெரோன் ரெட்டி மெகா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் உலகத் தரம் வாய்ந்த டிப்ளோமா, பட்டப் படிப்புகள் மற்றும் கல்விக் கட்டமைப்பு வசதிகளை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுவதே இப்பயணத்தின் நோக்கமாகும்.
ஒவ்வொரு கல்விப் புலமாக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள், அங்கிருக்கும் வசதிகள் குறித்து ஆச்சரியமடைந்தனர்.
தங்களின் எதிர்கால மேற்கல்விக்கு ஏய்ம்ஸ்ட் உத்தரவாதமான இடமாக இருக்குமென்பதை அவர்கள் உணர்ந்ததை காண முடிந்தது.
ஏய்ம்ஸ்ட் மாணவர்களுக்கு குறிப்பாக foundation மற்றும் இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கு வழங்கப்படும் கல்வி உபகாரச் சம்பளம் குறித்தும், வசதிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
ஏய்ம்ஸ்ட் தோற்றுநர் மறைந்த துன் எஸ். சாமி வேலு வழியில், ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் ஏய்ம்ஸ்ட்-டை முன்னணி பல்கலைக்கழகமாக உருவாக்குவதில் தொடர்ந்து காட்டிவரும் கடப்பாட்டை, ராஜா பாராட்டினார்.
இந்த இலவச கல்விச் சுற்றுலா மாணவர்களுக்கு பெரும் நன்மையளித்ததாக, பெற்றோர்களும் மாணவர்களும் வணக்கம் மலேசியாவுடன் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்தக் கல்விச் சுற்றுலா மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பயனுள்ள தகவல்களை வழங்கியதுடன், பலர் தங்கள் எதிர்காலப் படிப்புகளுக்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தையே முதல் தேர்வாக பரிசீலிக்க ஊக்குவித்தது.