கோலாலம்பூர், டிச 31 – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாநிலங்களிலும் நிவாரண மையங்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. சனிக்கிழமை இரவு 37 நிவாரண மையங்களில் 10,000 பேர் இருந்தவர்களை ஒப்பிடுகையில் தற்போது 9,690 பேர் மட்டுமே இருந்து வருகின்றனர். கிளந்தானில் நான்கு மாவட்டங்களில் 27 நிவாரண மையங்களில் 9,387 பேர் இன்னும் இருந்துவருகின்றனர். திரெங்கானுவிலும் வெள்ள அகதிகளின் எண்ணிக்கை தற்போது 118 ஆக குறைந்துள்ளது. அவர்கள் அனைவரும் மூன்று நிவாரண மையங்களில் இருந்து வருகின்றனர்.
ஜோகூரில் Segamat மாவட்டத்திலுள்ள இரண்டு நிவாரண மையங்களில் 54 பேர் இருந்து வருகின்றனர். பகாங்கில்பெரா, மாரான், தெமர்லோவில் உள்ள நிவாரண மையங்களில் 131 பேர் தங்கியுள்ளனர். இதுதவிர கேமரன் மலையில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட 87 பேர் இன்னமும் நிவாரண மையத்தில் தங்கியிருக்கின்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரிடர்களினால் 40 சாலைகள் மூடப்பட்டிருப்பதாக தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டது.