
செலாயாங் – ஜூன்-15 – மலேசிய இந்தியத் திருமண தொழில் வல்லுநர்கள் சங்கமான WPAM, தனது gala விருந்து நிகழ்வை இரண்டாவது முறையாக நடத்துகிறது.
மலேசியாவில் உள்ள சிறந்த இந்தியத் திருமண தொழில் வல்லுநர்களை ஒன்றிணைக்கும் ஒரு பிரத்யேக மாலை நேர நிகழ்ச்சியான இந்த ‘WPAM 2025’ ஆகஸ்ட் 9-ஆம் தேதி சிலாங்கூர், கிள்ளான், TSR மாநாட்டு மையத்தில் நடைபெறும்.
400-க்கும் மேற்பட்ட திருமணப் புகைப்படக்காரர்கள், முக ஒப்பனையாளர்கள், மண்டபங்களை அலங்காரம் செய்பவர்கள், கேட்டரிங் நடத்துநர்கள், திருமண பூ அலங்காரம் செய்பவர்கள், இசைக் குழுக்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
செலாயாங் KIP ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வேத குமார் ராஜகோபால் இவ்விவரங்களை வழங்கினார். ஏற்பாட்டுக் குழுத் துணைத் தலைவர் ராஜேந்திரன் சுகுமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இவ்வேளையில், இந்தியத் திருமணத் தொழில் நடத்துநர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் மற்றும் பிரச்னைகள் குறித்தும் செய்தியாளர்களிடம் விளக்கப்பட்டன.
முறைப்படி அல்லாமல் செயல்படும் வெளிநாட்டு விற்பனையாளர்கள், நிலைத்தன்மையற்ற விலை நிர்ணயம், கோயில்களால் வசூலிக்கப்படும் விற்பனையாளர் கட்டணம், அரசாங்க மானியங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.
இவ்வேளையில் இவ்வாண்டுக்கான WPAM gala இரவில் என்னென்ன புதுமைகள் இருக்கின்றன என்பது குறித்து வணக்கம் மலேசியாவிடம் வேத குமார் பகிர்ந்துகொண்டார்.
WPAM-யின் தொலைநோக்கானது – முறையான ஆலோசனை மற்றும் நாடு தழுவிய ஈடுபாடு மூலம் மலேசியாவின் திருமண SME-களைப் பாதுகாத்தல், அதிகாரம் அளித்தல் மற்றும் உயர்த்துதல் ஆகும்.
அவ்வகையில் படைப்பாற்றலை மதிக்கவும், ஒத்துழைப்புகளை உருவாக்கவும், தொழில்முறை வலையமைப்பை வலுப்படுத்தவும் இந்த gala இரவு நடத்தப்படுகிறது.