
கோலாலம்பூர், ஜூலை,08- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACCயின் முன்னாள் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க விருப்பம் போல் அரச விசாரணை ஆணையத்தை அமைக்க முடியாது. சம்பந்தப்பட்ட தரப்புகள் முதலில் விசாரணைகளை முடிக்க வேண்டும். RCI அமைப்பது தொடர்பான எந்தவொரு பரிசீலனையும் விசாரணைகளின் அடிப்படையிலேயே அமையும் என சட்ட மற்றும் நிறுவனச் சீர்த்திருத்தம் மீதான பிரதமர் துறை அமைச்சர் Datuk Seri Azalina Othman Said தெரிவித்தார்.
அதிகாரிகள் தற்போது மாஃபியா மற்றும் பங்கு உரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளை முழுமையான விசாரித்து வருகின்றனர். உண்மைகள், நீதி மற்றும் சட்ட ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில்தான் எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும் என அவர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதிலில் விளக்கினார்.
சட்டத்தின் ஆட்சி, விசாரணை செயல்முறையின் நேர்மை மற்றும் பொது நலன் ஆகியவற்றை நிலைநிறுத்துவதை உறுதிச் செய்ய இந்த அணுகுமுறை அவசியமாகும். RCI யை ஏற்படுத்த பல நடைமுறைகள் இருப்பதையும் அஸாலினா சுட்டிக் காட்டினார்.
அஸாம் பாக்கி அரசு அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி பங்குரிமை வைத்திருந்ததாகவும் MACCக்குள் ஒரு பெருநிறுவன மாஃபியா இருப்பதாகவும் இதற்கு முன் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதனை விசாரிக்க ஏன் விசாரணை ஆணையம் அமைக்கப்படவில்லை என கேட்கப்பட்டதற்கு அஸாலினா அவ்விளக்கத்தை அளித்தார்.



