
வாஷிங்டன், ஜூன்-4-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதிக்குள் சாத்தியமாகலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக முன்னேறி வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
லெபனானில் பதற்றத்தைத் தணிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக ஹெஸ்பொல்லா அமைப்புடன் அமெரிக்கா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) பேசுகையில், அமெரிக்காவுடன் தகவல் தொடர்புகள் தொடர்வதாகவும், ஆனால் பேச்சுவார்த்தையில் இன்னும் உறுதியான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் சற்று எச்சரிக்கையுடன் கூறியுள்ளார்.
மேலும், பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது முழுமையான போருக்கு வழிவகுக்கும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையிலான இந்த முக்கிய நகர்வு, மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றத்தை தணிக்குமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.



