Latestஇந்தியாஉலகம்மலேசியா

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலி; உலகத் தலைவர்கள் கண்டனம்

ஸ்ரீ நகர், ஏப்ரல்-23- இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட காஷ்மீரில் சுற்றுப்பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 20 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

“இந்தியாவின் சுவிட்சர்லாந்து” என்று அழைக்கப்படும் அளவுக்கு சுற்றுப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமான பஹல்காம் பகுதியில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கி ஏந்திய கும்பல் திடீரென சுற்றுப் பயணிகளை சரமாரியாக சுட்டதில், அவ்விடமே கலவரமானது; மக்கள் அழுது கூச்சலிட்டு அங்குமிங்கும் ஓடிய வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகியுள்ளன.

தாக்குதலை அடுத்து பாதுகாப்புப் படை அவ்விடத்தை சுற்றி வளைத்துள்ள நிலையில், மருத்துவக் குழுக்களும் விரைந்துள்ளன.

தடைச் செய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவிலிருந்து சிதறிய TRF கிளர்ச்சிப் படை அத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதலை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் என டிரம்ப் கூறினார்.

கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கும் அவர் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொண்டார்.

தற்போது இந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் துணையதிபர் ஜேடி வான்ஸும் தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

இதுவொரு கொடூரத் தாக்குதல் என வருணித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், எக்காரணம் கொண்டும் அதனை நியாயப்படுத்த முடியாது என்றார்.

முன்னதாக அத்தாக்குதல் குறித்து பெரும் கவலைத் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக சொன்னார்.

தாக்குதலுக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

2019-க்குப் பிறகு ஜம்மு – காஷ்மீரில் நிகழ்ந்துள்ள மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

அப்போது புல்வாமா நகரில் நடத்தப்பட்ட அந்த தற்கொலைப் படைத் தாக்குதலில், மத்திய சேமப்படை போலீஸார் 40 பேர் கொல்லப்பட்டனர்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அப்பகுதியில் 1989-ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சி நடந்து வருகிறது.

சமீப ஆண்டுகளில் வன்முறை குறைந்திருந்த நிலையில், திடீரென இக்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!