
புத்ராஜெயா, மே-14 – இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதை, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.
அதே சமயம் பாகிஸ்தானிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் விரைவில் தாயகம் திரும்புகின்றனர்.
இரு நாடுகளிலும் விமானச் சேவை பாதிப்பு, வான் வெளி மூடல் போன்ற பிரச்னைகளை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம்.
அவ்வகையில் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள மலேசியத் தூததரகங்கள் வாயிலாக உரிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
அங்குள்ள மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே நமது தலையாயக் கடமையென, விஸ்மா புத்ரா அறிக்கையொன்றில் கூறியது.
இந்நிலையில், அவ்விரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மலேசியர்கள், அவசர – அவசியமற்ற பயணங்களை ஒத்தி வைப்பதோடு, அருகிலுள்ள மலேசியப் பேராளரகங்களில் பதிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து தெற்காசியாவில் முன்னதாக பதற்றம் மூண்டது.
பின்னர் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்திய 4 நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் பஞ்சாயத்து தயவால் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.