
கோலாலம்பூர், ஜூன் 11 – புத்ரா ஜெயாவில் பணியாற்றிவரும் இந்திய அரசு ஊழியர்கள் சங்கமான இமயம் பிரதிநிதிகள், அதன் தலைவர் மருத்துவர் சதிஸ்குமார் கே.முத்துசாமி தலைமையில் தொடர்புத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். புத்ரா ஜெயா மற்றும் சைபர் ஜெயாவில் பணியாற்றிவரும் 300க்கும் மேற்பட்ட இந்திய அரசு ஊழியர்களைக் கொண்ட இமயம் அமைப்பு ஒற்றுமை, சிறந்த தொழில்முறை மற்றும் ஆக்கப்பூர்வ அரசு ஊழியர்களின் நலனை வலுப்படுத்தும் நோக்கத்தில் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த சந்திப்பின்போது தங்கள் உறுப்பினர்களை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தும் திட்டத்தையும் , சமூக மாற்றத்திற்கான பல்வேறு முயற்சிகளையும் , இமயம் குழுவினர் வெளிப்படுத்தினர். அதோடு அரசு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இத்தகைய முயற்சிகளை தாம் வரவேற்பதாக தியோ நீ சிங் தெரிவித்ததோடு இமயம் குழுவினரின் சமூக முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பையும் பாராட்டினார். அதோடு இளைஞர்கள் பொதுச் சேவைத்துறையில் சேர்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதோடு இதன்வழி அவர்கள் நாட்டிற்கு பங்கேற்றுவதில் உதவ முடியும் என்றும் தீயோ நீ சிங் வலியுறுத்தினார்.