
கோலாலம்பூர், ஜூலை 17 – முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விரைவில் இருதய சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், சிகிச்சை நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்து குடும்பத்தினரின் தனியுரிமையை மதித்து தற்போது வெளியிட முடியாது என்றும், அவ்வப்போது தகவல்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
72 வயதான நஜிப், SRC International வழக்கில் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அந்த தண்டனை 2028 ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.
மேலும், 1MDB தொடர்பான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தண்டனை முடிந்த பிறகு அந்தத் தண்டனை அமலுக்கு வரும். அந்தத் தீர்ப்புக்கு எதிராக நஜிப் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதற்கு முன்பு, 2022 செப்டம்பரில் இரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகள் காரணமாக நஜிப் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.



