
ஈப்போ, ஜூலை.31 -பேராக், ஈப்போவில் Bandar Baru Tambun பகுதியில் உள்ள வீடொன்றில், நேற்றிரவு மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 46 வயது மாது, அவரது 12 மற்றும் 11 வயதுடைய இரு மகள்களின் சடலங்களும் படுக்கையறையில் மீட்கப்பட்டன. எரிந்த கரித்துண்டுகள் இருந்ததாகக் கருதப்படும் ஒரு பாத்திரத்தையும் காவல்துறையினர் அந்த அறையில் கண்டெடுத்தனர்.
நேற்றிரவு இரவு 9.10 மணிக்குத் தங்களுக்கு அச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக மாவட்டக் காவல் தலைவர் உதவி ஆணையர் Muhammad Najib Hamzah தெரிவித்தார். மரணமடைந்தவர்களின் உடலில் காயங்களோ அல்லது அங்கு சந்தேகத்திற்கிடமான சூழலோ எதுவும் கண்டறியப்படவில்லை என்பது காவல்துறை தடயவியல் நிபுணர்கள் மற்றும் தடயவியல் மருத்துவ நிபுணர் நடத்திய முதல் கட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இறப்புக்கான காரணத்தை உறுதி செய்ய விசாரணை தொடக்கப்பட்டுள்ளது. அதுவரை அவை திடீர் மரணங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. விசாரணைக்கு உதவும் வகையில் இன்று உடற்கூறு ஆய்வு நடத்தப்படும் என்றும் Muhammad Najib கூறினார்.



