
வாஷிங்டன், மார்ச்-24-ஈரானின் எரிசக்தி வளங்களைத் தாக்கி அழிக்கும் திட்டத்தில், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தான், உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான Hormuz நீரிணையைத் திறக்க ஈரானுக்கு ட்ரம்ப் 48 மணி நேர அவகாசம் வழங்கியிருந்தார்.
இல்லையேல், ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளைத் தாக்கி சின்னாபின்னமாக்குவோம் என அவர் கடுமையாக எச்சரித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஈரானோ, அப்படி தாக்குதல் நடந்தால் மத்திய கிழக்கு முழுவதும் கடுமையான பதிலடி வழங்குவோம் என எச்சரித்தது.
இந்நிலையில், ட்ரம்ப் திடீரென தற்போது அந்த தாக்குதல் திட்டத்தை தற்காலிகமாக 5 நாட்களுக்கு ஒத்திவைத்து, “நல்ல முன்னேற்றமான பேச்சுக்கள் நடக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனக் கூறி, ட்ரம்ப்பின் கூற்றை தெஹ்ரான் மறுத்துள்ளது.
” உண்மையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தாங்கள் சிக்கிக் கொண்டுள்ள நிலைமையிலிருந்து தப்பிக்கவும், நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளை கட்டுப்படுத்தவும் ட்ரம்ப் வேறுவழியின்றி மேற்கொள்ளும் முயற்சியே இது” என ஈரானிய அதிகாரிகள் கூறினர்.
தாக்குதல் ஒத்திவைப்பால் பதற்றம் தற்காலிகமாக குறைந்தாலும், நிலைமை இன்னும் பதட்டத்திலேயே உள்ளது.
இப்படியே போனால் உலக எண்ணெய் விலை மற்றும் பொருளாதாரத்துக்கும் இதன் தாக்கம் தொடரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்….



