
பத்து மலை, மே-22 – சனாதன தர்மத்திற்கு எதிராகப் பொதுவெளியில் பேசப்படும் அவதூறு கருத்துகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் இன்று பிற்பகல் பத்துமலை இந்தியப் பண்பாட்டு மைய மண்டபத்தில் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தியது.
இந்து மதத்தின் உன்னத நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியங்களை அவமதிப்பது உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக, தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா தனது உரையில் குற்றஞ்சாட்டினார்.
நமது உலகப் புகழ்பெற்ற அடையாளமான பத்துமலை முருகன் ஆலயமும், அங்கு திரளும் லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டமும் சனாதன தர்மத்தின் அசைக்க முடியாத வலிமையைக் காட்டுகிறது.
இந்நிலையில், எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்துவதைத் தடுக்க முறையான சட்டம் தேவை எனக் கேட்டுக்கொண்ட அவர், ஆன்மீக அமைப்புகளும், ஆதீனங்களும், இந்து இயக்கங்களும் தற்போதைய சூழலில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதனிடையே, தேவஸ்தான அறங்காவலரும், மஹிமா தலைவருமான டத்தோ என். சிவகுமார், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மற்றும் ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் உரிமைகளுக்காகத் தான் ஸ்ரீ நடராஜா தலைமையில் தேவஸ்தானம் முன்னெடுத்துள்ள இந்த செய்தியாளர் சந்திப்பைப் பாராட்டிப் பேசினார்.
சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் பேசப்பட்ட, குறிப்பாக சனாதன தர்மத்தை “முறையான வழிமுறை இல்லை” எனப் பொதுவெளியில் சிலர் விமர்சித்ததற்குத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவுச் செய்தார்.
மத விவகாரங்களைத் தவறாகக் கையாள்வது சமுதாயத்தில் தேவையற்ற கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் உருவாக்கும் என எச்சரித்ததோடு, அனைவரும் அமைதியான மற்றும் மரியாதையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறினார்.
கண்டனக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களும், தான் ஸ்ரீ நடராஜாவின் கருத்துகளை ஆதரித்து, இந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தினர்.
தமிழக சட்டமன்றத்தில் எதிர் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் சனாதான எதிர்ப்பை கடுமையாகப் பதிவுச் செய்ததை அடுத்து, இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது



