
புத்ராஜெயா, ஜூன்-23-ஒரே தொகுதியில் போட்டியிடும் வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஒரே கட்சிச் சின்னத்தைப் பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் (EC) தெளிவுபடுத்தியுள்ளது.
ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ அங்கீகாரக் கடிதம் (watikah) பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே அந்தக் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் அஸ்மி ஷாரோம் கூறியுள்ளார்.
ஒரே தொகுதியில் இரண்டு வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட முயன்றால், அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றவருக்கே அந்தச் சின்னத்தைப் பயன்படுத்த உரிமை இருக்கும் என்றும் அவர் விளக்கினார்.
அண்மையில் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு, பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணிக்குள் சின்னப் பயன்பாடு மற்றும் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளது.
தேர்தல் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி அல்லது கூட்டணியின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன்பிறகே கட்சிச் சின்னத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் அஸ்மி தெரிவித்தார்.
எனவே, ஒரே தொகுதியில் போட்டியிடும் வெவ்வேறு அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் ஒரே சின்னத்தைப் பகிர்ந்து பயன்படுத்துவது தேர்தல் நடைமுறைகளுக்கு முரணானது என அவர் வலியுறுத்தினார்.



