
கோலாலம்பூர், மே 8 – ஜாலான் கோம்பாக் சாலையின் 10 ஆவது மைலுக்கு அருகே கடும் மழையின்போது மரம் விழுந்ததில் ஒரு கார் சேதம் அடைந்தது.
இதனால் இரு திசைகளிலும் போக்குவரத்தை அந்த மரம் தடுத்ததாக
@asalgombak என்பவரின் Threads பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கன மழையைக் கருத்திற்கொண்டு பயணத்தை அதற்கேற்றபடி திட்டமிடும்படி அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பிற்பகல் மணி 1.33க்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நடவடிக்கைக்கான உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் (Ahmad Mukhlis Mukhtar ) தெரிவித்தார்.
பண்டார் பாரு செலாயாங் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
தீயணைப்புப் படை வீரர்கள் சென்றடைவதற்கு முன்னதாகவே 27 வயதான ஓட்டுநர் காரிலிருந்து வெளியேறிவிட்டார்.
இச்சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லையென அகமட் முக்லிஸ் குறிப்பிட்டார்.



