
கம்பார், மார்ச்-5-பேராக், கம்பாரில் கிட்டத்தட்ட ஒரு பெரியக் குப்பைத் தொட்டி போல காட்சியளித்த ஒரு வீட்டில் தனியாக வாழ்ந்து வந்ததாக நம்பப்படும் 61 வயது மூதாட்டி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவர் மலேசியாவில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என அடையாளம் கூறப்பட்டது.
அண்டை வீட்டார் தகவல் அளித்ததையடுத்து போலீஸாரும் தீயணைப்பு – மீட்புப் படையினரும் சம்பவ இடம் விரைந்தனர்.
ஆனால், குப்பைகளும் பொருட்களும் கதவை அடைத்துக் கொண்டிருந்ததால் அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை.
பின்னர் பின்பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்தபோது மொத்த வீடும் குப்பைகள் மற்றும் பழையப் பொருட்களால் ஒரே அலங்கோலமாகக் கிடந்தது.
மருத்துவக் குழுவும் வரவழைக்கப்பட்டதில், மூதாட்டி உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.
சம்பவ இடத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லை.
இதனால் தற்போதைக்கு திடீர் மரணமாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
என்றாலும், மரணத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய சடலம் சவப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.



