
ஷா ஆலாம், மார்ச்-5-கிள்ளான், மேரு போலீஸ் நிலையத்திலேயே அடாவடியில் இறங்கிய 5 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை இரவு 9.40 மணியளவில் புகாரளிப்பதற்காக 3 ஆடவர்கள் வந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்ததாக, வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் கூறினார்.
அப்போது திடுதிப்பென 5 ஆடவர்கள் அடங்கிய கும்பல் போலீஸ் நிலையத்திற்குள் நுழைய, இரு தரப்புக்கும் இடையில் சண்டை மூண்டது.
அந்த ஐவரில் ஒருவன் இரும்புக் கம்பியால் புகார்தாரரைத் தாக்கினான்.
அந்த கலவரத்தில் போலீஸ் நிலையத்திலிருந்த ஒரு தொலைக்காட்சிப் பெட்டி சேதமடைந்தது.
பின்னர் சந்தேக நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
போலீஸ் உடனடியாக துப்புத் துலங்கியதில் 28 முதல் 41 வயதிலான அந்த ஐவரும் பிடிபட்டனர்.
இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட தவறான புரிந்துணர்வே சண்டைக்குக் காரணம் என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஐவரும் விசாரணைக்காக 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



