
கங்ஙார், மே-30-கட்டுக்கடங்காத விலங்குகளைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி உண்டு எனப், பெர்லிஸ் மாநில முஃப்தி டத்தோ Dr Mohd Asri Zainul Abidin விளக்கமளித்துள்ளார்.
ஹஜ் பெருநாளன்று குர்பானி சடங்கிற்கு பலி கொடுக்கும் மாட்டைப் பெர்லிஸ் மந்திரி அபு பாக்கார் ஹம்சா துப்பாக்கியால் சுட்ட விவகாரம் குறித்து பேசுகையில் அவர் அவ்வாறு சொன்னார்.
மந்திரி பெசார் மாட்டைச் சுடும் வீடியோ சர்ச்சையானதைத் தொடர்ந்து, இந்த மார்க்க விபரத்தை முஃப்தி வெளியிட்டுள்ளார்.
உண்ணக்கூடிய ஒரு விலங்கு கயிற்றை அறுத்துக்கொண்டு ஆக்ரோஷமாகத் தப்பியோடினால், அதனைப் பிடிப்பதற்காக அம்புகளாலோ அல்லது துப்பாக்கிச் சூட்டினாலோ வீழ்த்துவதில் தவறில்லை என்று அவர் சொன்னார்.
துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பாக ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூற வேண்டும் என்றும், அந்தச் சூட்டில் விலங்கு இறந்துவிட்டால் அதனை உண்ணலாம் என்றும் அவர் கூறினார்.
ஒருவேளை விலங்கு சாகாமல் இருந்தால், அதனை முறைப்படி வழக்கம்போலச் sembelih முறையில் கழுத்தை அறுக்க வேண்டுமென்றார் அவர்.
பொது மக்களின் பாதுகாப்புக்காகவே மாட்டின் காலில் தான் சுட்டதாகவும், அதன் பின்னரே அது முறைப்படி sembelih செய்யப்பட்டது என்றும் மந்திரி பெசார் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஒரு மந்திரி பெசார் பொது இடத்தில் எப்படி துப்பாக்கிக் கொண்டு வரலாம் எனக் கேட்டு, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.



