
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-20,
பினாங்கு இந்து அறப்பணி வாரியம், அம்மாநிலத்தில் குறைந்த வருமானம் பெறும் 50 சிறுநீரக நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.
ஜோர்ஜ்டவுனில் உள்ள Sri Kunj Bihari ஆலயத்தில் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் நேற்று இந்நிகழ்வு நடைபெற்றது.
அதிகரித்து வரும் டயாலிசிஸ் சிகிச்சைச் செலவுகளைச் சமாளிக்க உதவும் பொருட்டு, one-off முறையில் அதாவது ஒரு முறை மட்டும் வழங்கப்படும் வகையில் தலா 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதில் அறவாரியத்தின் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான RSN ராயர், துணைத் தலைவர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங், பினாங்கு ம.இ.கா தலைவர் டத்தோ ஜெ. தினகரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
தற்போது ஒரு முறை டயாலிசிஸ் சிகிச்சையை மேற்கொள்ள, 150 முதல் 200 ரிங்கிட் வரை செலவாகும் நிலையில், மருந்துப் பொருட்களின் விலை உயர்வு நோயாளிகளுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது.
இதனை உணர்ந்து, மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வைக் கருத்தில் கொண்டு அறவாரியம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 1,251 பேர் பல்வேறு உதவித் திட்டங்களின் கீழ் பயனடைந்துள்ளனர்.
இதற்காக வாரியம் சுமார் 1.12 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



