கோர்ட் மலை ஸ்ரீ கணேசர் ஆலய விமான ராஜகோபுர பாலஸ்தாபன விழா; 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

கோலாலம்பூர், மே-27,
கோலாலம்பூர், கோர்ட் மலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில், புதிய வான்முட்டும் ராஜகோபுர கட்டுமானப் பணிகளுக்கான ‘விமான ராஜகோபுர பாலஸ்தாபன விழா’ இன்று காலை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தலைநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அதிகாலையில் மங்களகரமான விசேஷ பூஜைகள் மற்றும் ஓமம் வளர்த்தலுடன் தொடங்கிய இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா, அவரது துணைவியார் மற்றும் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆலயத்தின் புதிய கோபுர கட்டுமானப் பணிகளைத் தான் ஸ்ரீ நடராஜா முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட புனித கும்பநீர் மூலவர் விநாயகருக்கும், கோபுர கலசத்திற்கும் தெளிக்கப்பட்டு, பக்தர்களுக்கும் ஆசி வழங்கப்பட்டது.
தற்போது இருப்பதை விட இன்னும் கூடுதல் உயரத்துடன் இந்த ராஜகோபுரம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் வணக்கம் மலேசியாவிடம் பேசிய தான் ஸ்ரீ நடராஜா, ராஜ் அகோபுர கட்டுமானப் பணிகள் குறித்து மேலும் விவரித்தார்..
அனைத்தும் சுமூகமாக முடிந்தால், வரும் விநாயகர் சதுர்த்திக்குள் கட்டுமானம் நிறைவுப் பெறும் என நவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
முழுக்க-முழுக்க நன்கொடைகள் வாயிலாக இந்த வேலைகள் நடைபெறுகிறது என்றார் அவர்.
இவ்வாலயம் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், இத்தகைய கூட்டு வழிபாடுகள் தங்களுக்கு மாபெரும் மன அமைதியையும், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் தருவதாக, வணக்கம் மலேசியாவிடம் பக்தர்கள் சிலர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
பக்தர்களின் பேராதரவோடு கம்பீரமாக உருவெடுக்கவுள்ள இந்த ராஜகோபுரம், நமது ஆன்மிகப் பாரம்பரியத்தின் உன்னத அடையாளமாகத் திகழும் என்பது திண்ணம்.



