
புத்ராஜெயா, மார்ச்-12-சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்காக பயணம் செய்யும் மலேசியர்களுக்காக அரசாங்கம் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள Skim Pengembara காப்பீட்டு திட்டம், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் ஜோகூர் – சிங்கப்பூர் எல்லையை தினமும் கடக்கும் சுமார் 4 லட்சம் மலேசியத் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படுவதாக, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
திட்டம் தயாரானதும், பரிசீலனைக்காக அமைச்சரவையிடம் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.
மலேசியாவில் உள்ள வீட்டிலிருந்து சிங்கப்பூரில் உள்ள வேலை இடம் வரை பயணம் செய்யும் நேரத்திலும் இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.
இந்த முயற்சி எல்லை தாண்டி வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் நலனையும் மேம்படுத்தும் என, புத்ராஜெயாவில் மனிதவள அமைச்சின் நோன்புத் துறப்பு நிகழ்வில் பங்கேற்றப் பிறகு ரமணன் கூறினார்.
மற்றொரு நிலவரத்தில், வீட்டிலிருந்து வேலை செய்வது உட்பட தமதமைச்சின் சிக்கன நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை, நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் தாம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் சொன்னார்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் இப்பரிந்துரை தனியார் துறையினரையும் உட்படுத்தியதாக ரமணன் கூறினார்.



