
கோலாலம்பூர், ஜூன்-22-சிலாங்கூரில் உள்ள சிறுவர் விளையாட்டுத் திடல்களை, பொழுதுபோக்கு உரிமப் பிரிவின் கீழ் மறுவகைப்படுத்தும் திட்டத்தை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியக் கேளிக்கைப் பூங்காக்கள் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு மையங்கள் சங்கமான MATFA, இப்புதிய திட்டத்தால் ஆண்டு உரிமக் கட்டணம் 13 மடங்கு வரை உயரும் என எச்சரித்துள்ளது.
தற்போதைய கட்டணமான 500 வெள்ளியிலிருந்து, இது 6,390 வெள்ளியாக அதிகரிக்கும் என அதன் தலைவர் Richard Koh தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டண உயர்வு, குறிப்பாக B40 மற்றும் M40 நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களுக்குக் கூடுதல் நிதிச் சுமையைக் கொடுக்கும்.
எனவே, இந்த விளையாட்டுத் திடல்களை ‘பொழுதுபோக்கு’ பிரிவுக்கு மாற்றாமல், தொடர்ந்து ‘சுற்றுலா மற்றும் உடற்பயிற்சி’ (Recreational) பிரிவிலேயே வைத்திருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தவிர, 1953-ஆம் ஆண்டு பொழுதுபோக்கு வரிச் சட்டத்தை மத்திய அரசாங்கம் முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும்; இதன் மூலம் குடும்பங்கள் மலிவான விலையில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என அவர் சொன்னார்.
B40, M40 குடும்பங்களுக்கான பொழுதுபோக்கு மையங்களை நடத்துவோருக்கு அரசாங்கம் வரிச் சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் Koh வலியுறுத்தினார்.
மக்கள் ஓய்வெடுக்கவும், ஒருவரோடு ஒருவர் கலந்து பழகவும் இத்தகைய பொது இடங்கள் அவசியமானவை என அவர் குறிப்பிட்டார்.



