
சிலாங்கூர் கெர்லிங் திருக்கோவிலில் 12 மணி நேர மகா சிவராத்திரி விழா
சிலாங்கூர், பிப்ரவரி 13 –
சிலாங்கூர் கெர்லிங் திருக்கோவிலில் வருகின்ற 15 ஆம் தேதி, வருடாந்திர மகா சிவராத்திரி விழா இந்த ஆண்டும் ஆன்மீக சிறப்புடன் நடைபெற உள்ளது. கோவில் நிர்வாகக் குழுவும், இதர சைவ சமய அமைப்புகளும் இணைந்து, அனைத்து இந்துக்களும் கலந்துகொள்ளும் வகையில் 12 மணி நேரம் இடைவிடாது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.
இவ்விழா, வருங்காலத்தில் அமைக்கப்படவுள்ள சைவக் கல்லூரி மற்றும் சைவத் திருக்கோவில் வளாகத்தில், மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. பக்தி இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டிய அரங்கேற்றம், டாக்டர் ஆறு. நாகப்பன் அவர்களின் ஆன்மீக உரை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்க எந்தவிதக் கட்டணமும் இல்லை என்றும் பக்தர்கள் அனைவரும் தாராளமாக கலந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு காணொளியும் தயாரிக்கப்பட்டுள்ளது.
மலேசிய சைவ சமய பேரவையின் செயலாளரும், சைவத் திருக்கோவில் கலைக் கல்வி அறவாரியத்தின் அறங்காவலருமான செல்வகுமரன் நடராஜன் அவர்கள், இந்த விழா பக்தர்களின் ஆன்மீக முன்னேற்றத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பெரிய திட்டங்களுக்கான முன்னோட்டமாகவும் இது அமையும் என்றார்.
மகா சிவராத்திரியின் ஆன்மீகப் பெருமையை உணர்ந்து, பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.



