
கோலாலம்பூர், ஜூன்-30 – சுயத் தொழில் செய்வோரும் சொக்சோ பாதுகாப்பைப் பெற ஏதுவாக, 2025 வரவு செலவுத் திட்டத்தில் மானிய அடிப்படையில் அரசாங்கம் SKSPS திட்டத்தை அறுமுகப்படுத்தியிருந்தது.
அதாவது சந்தா தொகையில் 70 விழுக்காட்டை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்.
இதன் மூலம், p-hailing எனப்படும் உணவு அனுப்பும் சேவையில் உள்ளோர், விவசாயிகள், மீனவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோருக்கும், தற்காலிக இயலாமை அல்லது நிரந்தர இயலாமைக்கான சொக்சோ பாதுகாப்புப் பெறும் நிலை உருவானது.
ஆனால், இப்படியொரு திட்டம் இருப்பதே அதிகமானோருக்குத் தெரியவில்லை. இதனால் பலர் பதியவும் இல்லை.
இந்த நிலையில், அத்திட்டத்திற்காக இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் மானியக் கோட்டா முடிவடைந்துள்ளதாகத் தெரிகிறது.
அதனை மனிதவள அமைச்சு பெரிய மனதுடன் அதிகரித்து உதவிட வேண்டுமென, மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் மூலம் இன்னும் பதியாமலிருப்போரும் அதில் பயனடைய முடியும் என்றார் அவர்.
சொக்சோவுடன் மஹிமா ஒத்துழைப்பை மேற்கொள்வதன் வாயிலாக, கோயில் பணியாளர்களுக்கும் பாதுகாப்பை வழங்க முடியும்.
ஆண்டுக்கு 232.80 ரிங்கிட் சந்தாவில் 70% அதாவது 162.70 ரிங்கிட்டை அசாங்கமே செலுத்தும்; சந்தாத்தாரர்கள் 70 ரிங்கிட்டை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும் என சிவகுமார் சொன்னார்.
அதே சமயம், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கங்களில் குறிப்பாக வழிபாட்டுத் தலங்களில் வேலை செய்வோர் மத்தியில் பிரச்சாரங்களை அதிகரிக்க அமைச்சுடன் இணைந்துப் பணியாற்றவும் மஹிமா தயாராக உள்ளது என அறிக்கையொன்றில் அவர் கூறினார்.