
டாமான்சாரா – ஜூன்-13 – சென்ட்ரல் டாமான்சாரா ரோட்டரி கிளப்பின் ஏற்பாட்டில் மே மாதம் தொடங்கி வரும் அக்டோபர் வரை மனநல முன்கட்டமைப்புத் திட்டம் நடைபெறுவது தெரிந்ததே.
அக்கிளப்பின் மற்றொரு சமூகக் கடப்பாட்டுத் திட்டம் இதுவாகும். இதில் மனநலப் பட்டறைகள், திறன் மேம்பாடு, சமூக ஈடுபாடு, ஆசிரியர்களுக்கான உளவியல் முதலுதவி, பள்ளிகளில் பாதுகாப்பான இடத்தை அமைத்தல் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 4,5 மற்றும் 6 ஆண்டு மாணவர்களுக்கான ஆரம்ப தலையீடு திட்டமான இது அண்மையில் முதல் கட்டமாக 3 தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
நெகிரி செம்பிலானின் லோரோங் ஜாவா தமிழ்ப் பள்ளி, பண்டார் ஸ்ப்ரிங்ஹில் தமிழ்ப் பள்ளி மற்றும் மலாக்காவின் ஜாசின் தமிழ்ப் பள்ளிகளே அம்மூன்று பள்ளிகளாகும்.
மாணவர்களோடு பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். மனநலம் பற்றிய புரிதல் குறித்து மாணவர்களுக்கு சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கப்பட்டன.
முதல் பட்டறையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில், மாணவர்கள் பொதுவாக மன ஆரோக்கியம் குறித்து அறிந்திருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டதாக, சென்ட்ரல் டாமன்சாரா ரோட்டரி கிளப்பின் தலைவர் கார்த்தி பழனிசாமி கூறினார்.
பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் சென்று விடுவதால், வீட்டில் இருப்பதை விட பள்ளியில் இருப்பதே ஆறுதலாக இருப்பதாக மாணவர்களு கருதுவதும் தெரிய வந்தது.
இந்த முதல் பட்டறைக்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், பயங்களையும் கவலைகளையும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் நன்கு புரிந்துகொள்கிறார்கள் என கார்த்தி சொன்னார்.
அதோடு, பகடிவதை, படிப்பு காரணமாக ஏற்படும் மன அழுத்தம் அல்லது பள்ளிக்குள்ளும் பள்ளி சூழலுக்கு வெளியேயும் உள்ள சவால்கள் மற்றும் அத்தகைய பயம் இருந்தால் அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து அவர்களுக்கு புரிய வைக்கப்பட்டது.
2-ஆவது பட்டறை மற்றும் அதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பள்ளியுடனான நிகழ்வு வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என கார்த்தி மேலும் கூறினார்.