
புதுடெல்லி, மே-14 – உள்நாட்டு சந்தையில் சர்க்கரை பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் இந்திய அரசு செப்டம்பர் மாத இறுதி வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏற்கனவே அனுப்பத் தயாராக இருந்த சில சரக்குகளுக்கும், உணவு பாதுகாப்பு ஒப்பந்தங்களின் கீழ் பிற நாடுகளுக்கு அனுப்பப்படும் சர்க்கரைக்கும் விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி நாடுகளில் ஒன்றான இந்தியா, அடுத்த சர்க்கரை அறுவடை குறைவாக இருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளது.
எல் நினோ (El Nino) காலநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு பருவமழை சராசரியை விட குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சர்க்கரை உற்பத்தியும் பாதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அரசு தரவுகளின்படி, இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது.
2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் 11 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர் அந்த அளவு தொடர்ந்து சரிவடைந்துள்ளது.



