
செராஸில் தகராறு செய்த மோட்டார் சைக்கிளோட்டிகள்; வைரல் காணொளியால் போலிஸ் விசாரணை
கோலாலம்பூர், பிப்ரவரி 13 –
காஜாங் அருகிலுள்ள செராஸ் பெர்டானா, பத்து 11 பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் தகராறு செய்து ஒரு காரின் பயணத்தைத் தடுத்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை காட்டும் காணொளி நேற்று இரவு சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணையில், சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் நடந்தது தெரியவந்துள்ளது.
பழுதடைந்த மோட்டார் சைக்கிளை தள்ளிச் சென்றிருந்த இருவரும் வாய்த்தகராறில் ஈடுபட்டு, சரியான பாதையில் சென்ற கார் ஓட்டுநரைத் தடுத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் எதிர்திசையில் சென்றதால் மற்ற சாலை பயனர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டதாக அறியப்படுகின்றது.
இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதென்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் போலீசாரை உடனடியாக தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சாலை பயனர்கள் விதிகளைப் பின்பற்றி அமைதியாக வாகனம் ஓட்ட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.



