
புத்ராஜெயா, மே-23- நாட்டில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவதற்கும் வைத்திருப்பதற்கும் அதிகாரப்பூர்வமாகத் தடை விதிக்கப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ‘குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம்’ மற்றும் ‘ஆபத்துக் குறைப்புச் சட்டம்’ ஆகிய இரண்டு புதிய நெறிமுறைகளின் வழியாக இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படுகிறது.
தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், இனிமேல் வெறும் வயதைக் குறிப்பிட்டு சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்க முடியாது; மாறாக, MyKad அடையாள அட்டை அல்லது கடப்பிதழ் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களின் மூலம் தங்களின் வயதை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்படும்.
டிக்டோக், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட தளங்களுக்கு இக்கட்டுப்பாடு பொருந்தும்.
தற்போதுள்ள கணக்குகளுக்கும் வயது சரிபார்ப்பு முறை கொண்டு வரப்படும் வேளை, விதிகளை மீறுவோரின் கணக்குகள் முடக்கப்படும் என MCMC எச்சரித்துள்ளது.
இணையப் பகடிவதை மற்றும் சிறார் பாலியல் சீண்டல்களிலிருந்து இளையத் தலைமுறையைப் பாதுகாக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இணையம் அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் முன்னெடுத்த இத்திட்டம் ஒருவழியாக செயல்வடிவம் பெறுவது உள்ளபடியே பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



