
ஜோகூர் பாரு, ஏப்ரல்-12-வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN, மிகப்பெரிய வனவிலங்கு கடத்தல் கும்பலை முறியடித்துள்ளது.
ஜோகூர் பாருவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், சுமார் 36.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வனவிலங்கு உடலுறுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏப்ரல் 4-ஆம் தேதி, ஜோகூர் ஜெயாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 420 கரடி பித்தப்பைகள் மற்றும் 602 மலைப்பாம்பு பித்தப்பைகளை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
bear bile என பரவலாக அழைக்கப்படும் கரடி பித்தப்பைகள், அவற்றின் அளளைப் பொருத்து ஆசியாவின் கள்ளச் சந்தைகளில் 4,700 முதல் 14,000 ரிங்கிட் வரை விலைபோகின்றன.
அதுவே மலைப்பாம்பின் பித்தப்பைகள் தலா 230 ரிங்கிட் முதல் 1,400 ரிங்கிட் வரை விற்பனையாகின்றன.
அவற்றில் மருத்துவ குணங்கள் இருப்பதாக ஒரு நம்பிக்கை இருப்பதால், சீனா, வியட்நாம், தென் கொரியா போன்ற நாடுகளில் அவற்றுக்கு பெரும் மவுசு உள்ளது.
இதுமட்டுமன்றி, புலிகளின் உடல் பாகங்களும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.
இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டதன் பேரில் வியட்நாம் ஆடவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் முறையான உரிமம் அல்லது ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



