
கோலாலம்பூர், மார்ச்-19-எரிபொருள் விலை உயர்வால் குறிப்பாக டீசல் விலை 51% உயர்ந்துள்ளதால், நாட்டில் பல சுற்றுலா போக்குவரத்து நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
சுற்றுலா பேருந்துகள் மற்றும் வேன்கள் முழுக்க முழுக்க டீசலையே சார்ந்துள்ளன; இதனால், விலை உயர்வு அவற்றுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக, மலேசிய உள்நாட்டு சுற்றுலா சங்கமான Mita கூறியது.
மேற்கு மலேசியாவில் கடந்த வாரம் டீசல் விலை 80 சென் உயர்ந்தது; இன்று மேலும் 80 சென் உயர்ந்து, RM3.12-லிருந்து RM4.72 -டாக பதிவாகும் என நிதியமைச்சு நேற்று அறிவித்தது.
இது வெறும் சில நாட்களில் 51% உயர்வு என்கிறார் சங்க துணைத் தலைவர் லோகேஸ்வரன் கே. சுகுமார்.
அரசாங்கம் உடனடியாக டீசலுக்கு சிறப்பு உதவித் தொகையை வழங்காவிட்டால், பல போக்குவரத்து நிறுவனங்கள் சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அவர் எச்சரித்தார்.
மலேசியாவும், எண்ணெய் உற்பத்தி நாடு தான் என்றாலும், உள்நாட்டு தேவைக்கான பெட்ரோலியம் பொருட்கள் அனைத்துலகச் சந்தையிலிருந்தே வாங்கப்படுகின்றன.
இந்நிலையில், மத்தியக் கிழக்கு மோதலால் உலகச் சந்தையில் விலை எகிறினாலும், மலேசியாவில் RON95 பெட்ரோல் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இது, குறிப்பாக ஹரி ராயா பயண காலத்தில் மக்களின் சுமையை குறைக்க உதவும் என கூறப்படுகிறது.
இப்போது, சுற்றுலா போக்குவரத்து ஆபத்தில் இருப்பதால், Mita-வின் கோரிக்கைக்கு ஏற்ப அரசாங்கம் டீசல் சலுகையை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது…



