
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8-தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவது மக்கள் தொகை மற்றும் வாழ்விட மாற்றங்களின் வெளிப்பாடே தவிர, கல்வியின் தரம் குறைந்ததன் அடையாளம் அல்ல.
நாட்டிலுள்ள சுமார் 130 தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிந்து வருவதற்கும் கல்வியின் தரத்திற்கும் முடிச்சுப்போடும் கூற்றுகளுக்கு உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி. ராமசாமி இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தோட்டப்புறங்களிலிருந்த இந்தியத் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கிப் புலம்பெயர்ந்ததே கிராமப்புறப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்ததற்கான முக்கியக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், நகரப்புறத் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இப்பிரச்னைக்குத் தீர்வாக, மூடப்படும் நிலையில் உள்ள கிராமப்புறப் பள்ளிகளுக்கான உரிமங்களை, இந்தியர்கள் அதிக அளவில் வாழும் நகரப் பகுதிகளுக்கு மாற்றிப் புதிய பள்ளிகளைக் கட்ட அரசாங்கம் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், வட்டார மற்றும் அனைத்துலக அளவிலான கணித, அறிவியல் போட்டிகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதித்து வருவதே, அங்கு வழங்கப்படும் உயர் தரமான கல்விக்குச் சான்றாகும் என்றும் அவர் கூறினார்.
எனவே, மாணவர் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதை ஒரு சாக்காக வைத்து, தமிழ்ப்பள்ளிகளின் கல்வித் தரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதை ஏற்க முடியாது என, தனது ஃபேஸ்புக் பதிவில் ராமசாமி குறிப்பிட்டார்.



