
கோலாலம்பூர், ஜூலை-3-தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் Low Taek Jhoவுக்கு அமெரிக்க அதிபர் Donald Trump பொது மன்னிப்பு வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாளை அமெரிக்கா தனது 250 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், John Low என பரவலாக அறியப்படும் Low, Trump கருணை வழங்க பரிசீலிக்கக்கூடிய 250 நபர்களில் ஒருவராக இருக்கலாம் என ‘The Atlantic’ ஊடக நிறுவனச் செய்தி கூறுகிறது.
Jho Low, தனது அமெரிக்கக் குற்றவியல் குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்ய மே மாதமே மன்னிப்புக் கோரிக்கை தாக்கல் செய்ததாக பத்திரிக்கையொன்று முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
இவ்வேளையில், Jho Lowவின் கோரிக்கை தற்போது தங்கள் கவனத்தில் இல்லை என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில், லோவுக்கு பொது மன்னிப்பு வழங்கும் எந்தவொரு சாத்தியத்தையும் அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
1MDB நிறுவனத்திலிருந்து 18.3 பில்லியன் மலேசிய ரிங்கிட் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அமெரிக்காவிலும் மலேசியாவிலும் ஊழல் மற்றும் பணமோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை Jho Low எதிர் நோக்கியுள்ளார்.
தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார். அதோடு அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.



