
சியோல், மே-17-தென் கொரியாவில் விளையாட்டு மையமொன்றின் கீழ் தள நீச்சல் குளத்திற்குள் கார் ஒன்று பாய்ந்ததில், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சனிக்கிழமையன்று, நீச்சல் முடிந்து வீடு திரும்பத் தயாரான 70 வயது மூதாட்டி ஒருவர் தனது காரை தவறுதலாக ரிவர்ஸ் செய்துள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், மற்றொரு வாகனத்தின் மீது மோதி, அந்த விளையாட்டு மையத்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது.
அடுத்த சில நொடிகளில் அந்தக் கார் தலைகீழாகக் கவிழ்ந்து, நேராக நீச்சல் குளத்திற்குள் விழுந்தது.
கார் குளத்திற்குள் விழுந்ததும், அங்கிருந்த நீச்சல் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.
காரின் கதவை உடைத்து, உள்ளே மூழ்கிக் கொண்டிருந்த மூதாட்டியை அவர்கள் பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து, நீச்சல் பயிற்சியாளர் அவருக்கு CPR முதலுதவி சிகிச்சை வழங்கினார்.
சம்பவம் நடந்த போது குளத்தில் 8 பேர் நீந்திக் கொண்டிருந்த நிலையில், கார் அவர்கள் மீது விழாமல் தப்பியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர், சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உடைந்த கண்ணாடிகள் குத்தியதில் காயமடைந்த ஒரு நீச்சல் வீரருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஓட்டுநர் மது அருந்தவில்லை என்றும், அவரிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இருந்தது என்றும் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தனக்கு இந்த விபத்து எப்படி நடந்தது என்று நினைவில்லை என அம்மூதாட்டி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.



