
கோலாலாம்பூர், செப்டம்பர்-11,தேசிய மாதத்தை முன்னிட்டு, SJKP எனும் வீட்டுக் கடன் உத்தரவாத நிறுவனம் மலேசியர்கள் தங்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில் புதிய பொதுச் சேவை விழிப்புணர்வு வீடியோ பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த வீடியோவில், நிலையான மாதச் சம்பளச் சான்றிதழ் இல்லாததால் சொந்தமாக ஒரு வீட்டை வாங்க முடியாமல் பல சவால்களை எதிர்கொள்ளும் அப்துல்லா எனும் ‘கிக்’ (Gig) ஊழியரின் கதையை அடிப்படையாகக் கொண்டு, வாடகை வீட்டுச் சிக்கல்கள் உணர்ச்சிப்பூர்வமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இவரைப் போன்ற நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கும், சுயத் தொழில் செய்பவர்களுக்கும் அரசாங்கத்தின் இந்த சிறப்பு உத்தரவாதத் திட்டம் மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என, SJKP நிறுவனத்தின் முதன்மை அதிகாரி Juanita Rusmini Abdul Jalil தெரிவித்துள்ளார்.
சொந்தமாக முதல் வீட்டை வாங்குவது என்பது வெறுமனே ஒரு கனவு மட்டுமல்ல, சரியான ஆதரவு மற்றும் நிதி வழிகாட்டல் மூலமாகத் திட்டமிட்டு அடையக்கூடிய ஒரு இலக்காகும் என்பதை இந்த வீடியோ பிரச்சாரம் மலேசியர்களிடையே சுட்டிக் காட்டுகிறது.
எனவே, சொந்தமாக முதல் வீட்டை வாங்க விரும்பும் தகுதியுள்ள மலேசியர்கள், இத்திட்டத்தில் பங்குபெறும் வங்கிச் கிளைகளுக்கு நேரில் சென்றோ அல்லது sjkp.com.my எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டோ கூடுதல் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.



