
உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.A . விக்னேஸ்வரன் தொழிலாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
இதற்கு மஇகாவும் களத்தில் இறங்கி இந்திய சமூகத்திற்கு பல்வேறு உதவிகள் செய்துவருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் நலன்களை மஇகா, அரசாங்கத்தின் உதவியோடு தொடர்ந்து பாதுகாக்கும். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என தனது தொழிலாளர் தினத்தை வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மலேசியாவின் வளர்ச்சிக்கும் வளப்பத்திற்கும் பாடுபட்ட தோட்டத் தொழிலாளர்களையும் அவர்களது கடுமையான உழைப்பையும் , தியாகத்தையும் இன்றைய இளைய தலைமுறை மறந்துவிடக்கூடாது. ஏழ்மை நிலையில் இருந்தாலும் தங்களது பிள்ளைகளின் கல்விக்கு முன்னுரிமை வழங்கும் சமூகமாக இந்தியர்கள் இருந்து வருகின்றனர்.
இந்திய தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் உழைப்பே அவர்களின் மூலதனம். எந்தத் தொழிலைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செய்தால் வெற்றி பெறமுடியும் என்ற சிந்தனையை மனதில் கொண்டு தொடர்ந்து உழைப்புக்கும் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் தமது தொழிலார் தின வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.



