
ஜோகூர் பாரு, ஜூன் 30 – நாளை முதல் வாகன நுழைவு அனுமதி (VEP) இல்லாமல் மலேசியாவிற்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படவுள்ளது.
மலேசிய சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் அடிப்படையில், வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் மலேசியாவிற்குள் நுழைவது சட்டப்படி குற்றமாகும்.
கடந்த ஜூன் 4 ஆம் தேதியன்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் லோக் சியூ ஃபூக், VEP அமலாக்கம், எல்லை தாண்டிய போக்குவரத்தை நிர்வகிப்பதற்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டு வாகனங்கள் மீதான போக்குவரத்துச் சட்டங்களை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த அமலாக்கத்திற்கு இணங்க மறுக்கும் நபர்களுக்கு அபராதம் மட்டுமல்லாமல் VEP புதுப்பிக்கும் வரை, அவர்களின் வாகனம் மலேசியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் காஸ்வே மற்றும் இரண்டாவது சாலை வழியாக மலேசியாவிற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டு வாகனங்களும் https://vep.jpj.gov.my இல் பதிவு செய்ய வேண்டும் எனவும், ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) VEP ஸ்டிக்கருக்கு 10 ரிங்கிட் கட்டணமும் ஒவ்வொரு நுழைவுக்கும் 20 ரிங்கிட் சாலை கட்டணமும் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கதும்.
இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் முதல் VEP அமைப்பு கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த அமலாக்கம் மக்களுக்கு புதிதல்ல என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.