
தாவாவ், மே 12 – தாவாவ் , தாமான் பெர்வீராவிலுள்ள RainForest நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த பதின்மவயது சிறுவன் மூழ்கி மரணம் அடைந்தான். இதர 13 நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் அச்சிறுவன் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது.
நீச்சல் தெரியாத நிலையில் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த முகமட் அய்மான் என்ற அந்த சிறுவன் திடீரென காணவில்லை என அவனது நண்பர்கள் உணர்ந்ததைத் தொடர்ந்து உடனடியாக தாவாவ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
நேற்று மாலை மணி 4.45 க்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படை உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தருவதுற்கு முன்னதாகவே தகவல் அறிந்த பொதுமக்களும் கிராமவாசிகளும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு அச்சிறுவனின் உடலை மீட்டனர்.
எனினும் அச்சிறுவன் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சின் மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்தியதாக தாவாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் அதிகாரி ஜெமாசின் யுஜின் ( Jemashin Ujin ) தெரிவித்தார்.



