
நீலாய், மே-2,
நெகிரி செம்பிலான், பண்டார் பாரு நீலாயில் நேற்று அதிகாலை போதைப்பொருள் ஒழிப்புச் சோதனையின் போது, அடுக்குமாடி குடியிருப்பின் 13-ஆவது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அதிகாலை 1.51 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக நெகிரி செம்பிலான் போலீஸ் கூறியது.
20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், போலீஸிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் பால்கனி வழியாக இறங்க முயன்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரோந்துப் படையினர், அந்தப் பெண் மயக்க நிலையில் கிடப்பதைக் கண்டனர்.
மருத்துவக் குழுவினர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிச் செய்தனர்.
அவரது உடல் சவப் பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கட்ட விசாரணையில் இதில் குற்ற அம்சங்கள் ஏதும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இதனால் இச்சம்பவம் ‘திடீர் மரணம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறுவதற்காக போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



