சிரம்பான், ஜூலை 4 – நெகிரி செம்பிலான், நீலாயில், ஐந்தாண்டுகளுக்கு முன், தனது வளர்ப்பு பெற்றோரை கொலை செய்த ஆடவன் ஒருவனுக்கு, சாகும் வரை தூக்கு தண்டனை விதித்து, சிரம்பான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
45 வயது டான் கியான் கிப் (Tan Kian Ngip) எனும் அவ்வாடவனுக்கு எதிரான இரு கொலை குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி அவனுக்கு அந்த தண்டனையை விதித்தார்.
எனினும், அந்த தண்டனை எங்கு, எப்போது நிறைவேற்றப்படும் என்பது பின்னர் நிர்ணயிக்கப்படுமென நீதிபதி தெரிவித்தார்.
தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக, அவ்வாடவன் மேல்முறையீடு எதையும் செய்யவில்லை.
முன்னதாக, 2019-ஆம் ஆண்டு, ஜூலை 24-ஆம் தேதி, நீலாய், தாமான் டேசா மெலாத்தியில், தனது 67 வயது வளர்ப்பு தாயையும், 73 வயது வளர்ப்பு தந்தையையும் கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.