
கோலாலாம்பூர், ஏப்ரல்-14-சிங்கப்பூர் எழுத்தாளர் நா. ஆண்டியப்பன் எழுதிய ‘வாமனத் தீவு’ என்ற புதிய நூல் வெளியீட்டு விழா, நேற்று தலைநகர் ம.இ.கா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வில் சுமார் 50 முதல் 60 பேர் வரை கலந்து கொண்டனர்.
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை செயலதிகாரி டத்தோ பி. சகாதேவன் முன்னிலை வகித்து, முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்.
சரவணன் தமதுரையில், வரலாற்றை பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இந்நூல் அடுத்த தலைமுறைக்கு ஒரு முக்கிய வரலாற்று பதிவாக அமையும் என தெரிவித்தார்.
நூலாசிரியர் ஆண்டியப்பனுக்கு பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட நிலையில், டத்தோ ஸ்ரீ சரவணன் RM3,000 கொடுத்து நூலை வாங்கி ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பலரும் நூலை வாங்கி ஆதரவு தெரிவித்ததுடன், மலாயாப் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டு, அவர்களுக்கு இலவசமாக நூல்கள் வழங்கப்பட்டன.
தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது பெற்ற நெல்லை ஜெயந்தாவின் இலக்கிய உரையுடன் நடைபெற்ற இவ்விழாவில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. ராஜேந்திரன் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.
மலேசியாவில் பத்திரையாளராக முத்திரைப் பதித்த ஆண்டியப்பன், சிங்கப்பூருக்குப் புலம் பெயர்ந்து இலக்கியப் பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.



