
சிரம்பான், மே-8- நெகிரி செம்பிலான் அரசின் ‘தெருநாய்கள் ஒழிக்கும் திட்டம்’ கூட்டரசு சட்டத்தை மீறுகிறா என்பதை தேசிய சட்டத் துறை அலுவலகம் ஆராய வேண்டும்.
அப்படியிருந்தால், அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மலேசிய வழக்கறிஞர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
மாநில அரசின் அந்நடவடிக்கை சட்டத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் எதிரானது; தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பை உண்மையில் சட்டப்பூர்வமாகவும் கருணையுடனும் கட்டுப்படுத்த வேண்டுமென, அதன் தலைவர் எஸ்ரி அப்துல் வஹாப் கூறினார்.
ஊராட்சி மன்றங்கள் சுயமாக நாய்களை கொல்வதற்கு சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லையென அவர் சுட்டிக் காட்டினார்.
விலங்குகள் நலச் சட்டமானது, விலங்குகளுக்கு தேவையற்ற வேதனைகளை ஏற்படுத்துவதை குற்றமாக வகை செய்வதோடு, தெரு நாய்கள் பிரச்னையை முறையாகக் கையாளும் வழிமுறைகளையும்கொண்டுள்ளது.
இந்நிலையில் நெகிரி அரசின் திட்டம், அச்சட்டத்திற்கு முரணாக உள்ளது.
எனவே, கால்நடை சேவைத் துறையும் விலங்குகள் நல வாரியமும் இத்திட்டத்தை தடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மலாய் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில், ‘பாதுகாப்புக்’ காரணங்களுக்காக சில தெருநாய்களை கொல்ல, கடந்த வாரம் நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஒருமனதாக முடிவு செய்தது.
புகார்கள் அதிகரித்துள்ளதையும், பொது பாதுகாப்பு சிக்கல்களையும் கருத்தில் கொண்டு, ஊராட்சி மன்றங்கள் அதனை செயல்படுத்தும் என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் கூறியிருந்தார்.