
கோலாலாம்பூர் – ஜூன்-13 – நெடுஞ்சாலை கட்டுமான சுக்குக் நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணையில், தங்கக் கட்டிகள், வைரங்கள் மற்றும் கேசினோ உபகரணங்கள் உட்பட சுமார் 16 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைப்பற்றியுள்ளது.
செராஸ், பண்டார் தாசேக் செலாத்தானில் தான் ஸ்ரீ பட்ட கொண்ட ஒருவரின் வீட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த பறிமுதல் மேற்கொள்ளப்பட்டதாக, MACC வியூகத் தொடர்பு பிரிவு இன்று ஓர் அறிக்கையில் கூறியது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் சுமார் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 84 சொகுசு பைகள்; சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 11 சொகுசு கைக்கடிகாரங்கள்; சுமார் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் கட்டிகள், நாணயங்கள் மற்றும் சிலைகளும் அடங்கும்.
அதே சமயம், சுமார் 4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வைரங்கள், நகைகள் மற்றும் 150,000 ரிங்கிட் மதிப்பிலான ஆடம்பர கேசினோ உபகரணங்களின் தொகுப்பும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தவிர, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு இரகசிய பாதுகாப்பு அறையையும் MACC கண்டுபிடித்தது; ஆனால் அந்த ஆயுதங்கள், சம்பந்தப்பட்ட நபருக்குச் சொந்தமான பாதுகாப்பு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டதால் அவை பறிமுதல்
செய்யப்படவில்லை.
இவ்வேளையில், மேலும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் சாத்தியக்கூறுகளை நிராகரிக்கவில்லை என, MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.